February 23, 2025

திருப்பாவை 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
ற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள்:

மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்ற
உன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்!
பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ
எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது.
நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம்.
உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்; மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும்.

விளக்கம் :

விடியற்காலையில் வந்து உன்னை வழிபட்டு உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தை கேட்பாயாக ! பசுக்களை மேய்த்து பிழைக்கும் ஆயர்குலத்தில் நீ பிறந்தாய். எங்களுடைய இந்த சிறு விரதத்தை கண்டுகொள்ளாமல் போகாதே! இன்று நீ தரும் சிறு பறையை பெறுவதற்கு மட்டும் நாங்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை.

எங்கள் தலைவனே! என்றைக்கும் தொடர்ந்து வரும் 7 பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உமக்கு மட்டுமே பணிகள் செய்யும் புண்ணயத்தை எங்களுக்கு அருள வேண்டும். இது தவிர ஏனைய எம் ஆசைகள் யாவற்றையும் நீயே அகற்றி விடு.